Wednesday, September 3, 2008

மாந்தி

நம்ம நாட்டு வானிலை விஞ்ஞானிகள் இப்ப உள்ள ஆளுகளை சொல்லலை. நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு பலன்களை சொன்னாங்களே அந்த குரூப்பை சொல்றேன். அவங்க சொன்ன ஒரு துணைக் கோள்தான் மாந்தி.

சனிக்கிரகம் இருக்கு அதோட துணைக்கோளை பாத்தீங்களா-டைட்டன் அதைத்தான் மாந்தி அப்படின்னிருக்காங்க நம்ம ஆளுங்க. சமீபத்து செய்தில டைட்டன்ல தண்ணி இருந்ததுக்கான அடையாளம் இருக்குங்கறாங்க.

ரஷ்ய விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்க யு.எப்.ஓ எனப்படும் பறக்கும் தட்டுகளில் வரும் அயல் கிரகவாசிகள் டைட்டனில் இறங்கி ரெஸ்ட் எடுத்து பயணக் களைப்பை போக்கிட்டு பூமிக்கு வந்து பாத்துட்டு போறதா சொல்றாங்க.

எது எப்படியோ ஆயிரம் வருஷத்துக்கு முன்னால எந்த விதமான விஞ்ஞான உபகரணமும் இல்லாமல் நவக்கிரகத்தை கண்டுபிடிச்சு மாந்திய பத்தியும் சொல்லியிருக்காங்க இது நிச்சயமா நம்ம ஆளுகளுக்கு வெளி கிரக தொடர்பு நிச்சயமா இருந்ததுக்கான ஒரு ஆதாரம். வெளிகிரக தொடர்பு எப்படி உணடாச்சு எப்படி கட் ஆச்சு இதெல்லாம் பெரிய டாபிக்.

பில்லி சுனியம் செய்வினை

நம்ம தமிழனுக்கு உள்ள மோசமான குணம் தனக்கு பிடிக்காத ஆளை எப்படியும் கெடுக்கணும் கவுத்தனும்கிற மனப்பான்மை தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்கிறது அவங்களோட விருப்பம்

பில்லி சுனியம் செய்வினை எல்லாம் அடுத்தவனை கெடுக்கிறதுக்காக வைக்கிறது. இது அமானுஷ்ய விஷயம்கிறாங்க. மனித சக்திக்கு அப்பாற்பட்டதுன்னு எடுத்துக்குங்க. ஒருத்தனோட ஜாதகக் கட்டத்தில 5ம்
பாகமும் 9ம் பாகமும் பலவீனமா இருந்தா பில்லி சுனியம் வேலை செய்யும்கிறாங்க 5ம் பாகமும் 9ம் பாதமும் நல்லா இருந்தாலும் தசாபுத்தி மோசமா இருந்தா பில்லி சுனியம் பலிக்குமாம்.

பில்லி சுனியத்தின் ஆப்ரிக்க கண்டத்து அடிப்படை ஊடூ எனப்படுகிறது. கறுப்பு மாந்தீரிகம் எனப்படும் பிரபலமான ஆப்ரிக்க பில்லி சுன்யம் ஊடூவை அடிப்படையாக கொண்டது.

செய்வினை வச்ச வீட்ல எதாவது ஒரு பக்கம் கைய காட்டி அந்த எடத்த தோண்டுவாங்க. அந்த எடத்துல ஒரு தகடு இருக்கும். இதை மோசடி மாந்திரீகம்கிறாங்க.

பில்லி சுனியம் செய்வினை வைக்கிறதுக்கும் ஆள் இருக்காங்க வச்சத எடுக்கிறதுக்கும் ஆள் இருக்காங்க.

பில்லி சுனியம் செய்வினை நீக்கிறதுக்குன்னே தெய்வீக திருத்தலங்கள் (கோயில்கள்) 3 இருக்கு அங்க போய் சாமிய தரிசனம் பண்ணிட்டு வந்தாலே தெய்வீக நிவாரணம் உறுதி.அந்த தலங்கள் 1) திருச்சி அருகே உள்ள குணசீலம் ஊரில் உள்ள பெருமாள் ஸ்ரீனிவாசன் 2) வேலூர் மாவட்டம் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள சோளிங்கர் ஊரில் உள்ள மலையில் வீற்றிருக்கும் பெருமாள்-யோகநரசிம்மர் 3). கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன்.

நீதியரசர் ஸ்ரீனிவாஸன்

நீதிபதியுடைய கடமை நியாயமான தீர்ப்பை சொல்வது. ஒரு மேற்கொளை எடுத்துக்காட்டி தீப்பு சொல்பவர்கள் மிக அரிது. இவருடைய தீர்ப்பு பரபரப்பான தீப்பு. அதை இந்த பக்கத்தின் கடைசியில் சொல்கிறேன்.

அதற்கு முன் இவரைப் பற்றி சில வரிகள் ஆச்சாரமான பிராமண குடும்பம். நீதிமன்றத்துக்கு வரும் போது குடிக்க வெள்ளி கூஜாவில் தண்ணீர் கொண்டு வருவார். தலையில் டர்பன். மிகவும் எளிமையானவர் நேர்மையானவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பின்னர் பதவி உயர்வில் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.

இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த போது இவர் தீப்பளித்த வழக்குதான் பிரபலமான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கு.

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கூடுதல் தளங்களை கட்டியதாக பிளசன்ட் ஸ்டே ஓட்டல் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது விதிமுறைகளை மீறி கட்டிய தளங்களை இடிக்கச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதி நீதியரசர் ஸ்ரீனிவாஸன்.

தீர்ப்பில் கூடுதல் தளம் கட்ட அனுமதி வழங்கிய ஆட்சியாளர்களுக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த ஓட்டல் வழக்கின் தீர்ப்பின் எதிரொலிதான் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம். ஆளும்கட்சியாளர்களின் அராஜகத்துக்கு பலியான 3 விவசாய கல்லூரி மாணவிகள் எப்படி துடித்திருப்பார்கள்.

அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.

குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் இல்லாவிட்டால் எப்பேர்ப்பட்ட மன்னனும் கெடுக்கக் கூடியவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெட்டுப்போவான் நியாயமான மேற்கொள். அதுவும் செல்வி ஜெயலலிதாவின் குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் இல்லை என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார் நீதியரசர் ஸ்ரீனிவாசன்.

முதலமைச்சர் பதவியில் இருப்பவரை விமர்சிப்பது மிகப் பெரிய விஷயம். அதுவும் அவர் செய்த தவறுக்கு தலைமைப் பதிவியில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது நீதிபதியின் சிறப்பை காண்பிக்கிறது.

Sunday, August 17, 2008

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

ஒருகாலத்துல ஓஹோன்னு இருந்த அரசு போக்குவரத்து இப்ப ஐசியூக்கு போற ஸ்டேஜ்ல இருக்கு.

பல்வேறு தனியார் பஸ் கம்பெனிகளை இணைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமாக சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகம், இன்று தடம் மாறி தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தேசிய அளவில் பல பரிசுகளை அள்ளிக் குவித்தன தமிழக போக்குவரத்து கார்ப்பரேஷன்கள். பிஆர்சி, கேடிசி, பல்லவன் கழகங்கள் இசைக்குழு வைத்திருந்தன. இசைக்குழுக்கென தனி பஸ். மற்ற இசைக்குழுக்களை விட கார்ப்பரேசன் இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்த நாடப்பட்டன. இன்று இசைக்குழுக்களே இல்லை.

தமிழகம் முழுக்க 160 கிளைகளுக்கு குறையாமல் இருக்கும் TNSTC-யில் ஒரு கிளைக்கு குறைந்தது 10 பஸ்கள் ஸ்பேர் பார்ட்ஸ் இல்லாமல் ஓடாமல் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 1600 பஸ்கள் ஓடாததினால் அரசுக்கு இழப்பு எவ்வளவு?

1998க்கப்புறம் கிளைகளில் டெக்னிக்கல் ஸ்டாப் (TM) எனப்படும் பஸ் மெயின்டனன்ஸ் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட வில்லை.
முனியப்பன் நண்பர் டாக்டர் X இடம் ஒரு TNSTC யின் ஓட்டுநர் லீவ் சர்டிபிகேட்டுக்காக வந்தார். பொய் லீவு இல்லை. உண்மையான லீவு. காரணம் பணியில் ஸ்டீயரிங் வீல் ஒடிக்கும் போது ரிடர்ன் ஆகி அவர் கையில் வேகமாக அடிக்க BOTH BONE FRACTURE FORE ARM, இது வண்டிகளின் சிறப்பான பராமரிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

புறநகர் ஓட்டுநர்கள், பணி நேரம் குறைந்தது 14 மணிநேரம், 20 மணி நேரம் பஸ் ஓட்ட பணிக்கப்படும் வழித்தடங்களும் உள்ளன. எவ்வளவு சிரமம் பாருங்க. தொடர்ச்சியா ஒரு ஓட்டுநர் தனி ஆளா, 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் பஸ் ஓட்டுறது, அந்த ஓட்டுநருக்கு எவ்வளவு சிரமத்தைக் கொடுக்கும்? Crude Oil உலக சந்தையில் 1 பேரல் 40 டாலருக்கு விற்கப்பட்ட போது நிர்ணயம் பண்ணப்பட்ட பயணக்கட்டணம் தான், இன்று Crude Oil 1 பேரல் 140 டாலர் விற்கும் போதும் அதே கட்டணம் தான். பஸ் பயணக் கட்டணத்தை கூட்டனும்ல, நீங்க சொல்றது புரியுது.

பஸ் கட்டணத்தைக் கூட்டினா, தேர்தல்ல ஓட்டு விழுகாது, ஆட்சிக்கு வரமுடியாதுல்ல. இது அரசியல். பஸ் கட்டணத்தைப் பல மடங்கு கூட்ட வேணாம். ஒரு 5 பர்செண்ட், 100 ரூபாய்னா 105 ரூபாய். இப்படி கூட்டினா அது அரசு பேருந்துகளை நம்பி இருக்கும் ஏழை, எளியோரை நிச்சயம் பாதிக்காது. இலவச பஸ் பாஸ் எல்லாம் ரத்து செய்ய வேணாம். ஏன்னா அந்த திட்டங்களால பயனடைபவர்கள் மிக அதிகம்.

பஸ் கட்டணத்தை யாரையும் பாதிக்காத அளவுக்கு மிகச்சிறிதளவு உயர்த்தினால், தற்போது தமிழகம் முழுதும் ஓடாமல் நிற்கும் 1000க்கும் அதிகமான பேருந்துகள் ஓடும், பராமரிக்கப்படும், பொதுமக்கள் பயனடைவார்கள். TNSTCயும் லாபத்தில் இயங்கும், புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும், தமிழகத்தின் வளர்ச்சி இன்னும் நன்றாக இருக்கும்.

குற்றாலம் மூணார் டிப்ஸ்

குற்றாலம் போறவுக குற்றாலத்தோட குளியல் முடிஞ்சுச்சுன்னு நெனக்காதீக. குற்றாலத்திலிருந்து செங்கோட்டை போய் கேரளாவுக்குள்ள போங்க. ஆரியங்காவு அய்யப்பன கும்பிட்டு, கொஞ்சம் தள்ளி போனா லெப்ட்ல பாலருவின்னு போட்ருப்பாங்க. கேரள வனத்துறை கட்டுப்பாட்டுல உள்ள இடம். காலை 7.30 லிருந்து சாயங்காலம் 5 மணி வரை உள்ள அனுமதிப்பாங்க.

அதுக்கப்புறம் தென்மலை. அங்க போட்டிங் போகலாம். 1 மணி நேரம் போட்டிங் கூப்பிட்டு போவாங்க. கேரளா அரசு தென்மலையை ஒரு சுற்றுலாத்தலமா டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கு.


மூணாறு போறவுக இத மட்டும் கேட்டுக்குங்க. மூணார்ல இருந்து ஊருக்கு திரும்புறீகள்ல, அப்ப சாயங்காலம் 4 மணிக்கு கிளம்புங்க. மலைல இருந்து இறங்க, உடுமலைப்பேட்டை பாதை இருக்கு. அந்தப்பாதைல வந்தா மறையூர்னு ஒரு ஊர் வரும். அங்க இருந்து 6 மணிக்கு கௌம்புனா, 15 கிலோமீட்டர் தூரத்துக்கு வனத்துறையின் காடு. காட்டு மிருகங்கள் உலாவுற நேரம். மான்கள் கூட்டம் கூட்டமா திரியும். யானைக்கூட்டம் பாக்க கண்டிப்பா சான்ஸ் இருக்கு. நீங்க மச்சக்காரங்கன்னு வச்சுக்கங்க, யானையை நீங்க போற ரோட்லயே நேருக்கு நேரா சந்திக்கலாம்.

குற்றாலம்

சிவபெருமான் பார்வதி திருமணம் திருக்கயிலாய மலையில் நடைபெற்ற போது அக்கல்யாணத்தை காணவந்த கூட்டத்தால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அந்த ஏற்றத்தாழ்வை சமன் செய்ய அனுப்பப்பட்ட குறுமுனி அகத்தியர் வந்தமர்ந்த இடம் தான் பொதிகை மலையான குற்றாலம்.

குற்றாலக் குறவஞ்சி படிக்கலைன்னாலும் எல்லோரும் கேள்வியாவது பட்டிருப்பீங்க.

குற்றாலத்திலே குளிக்கிற அனுபவம் ஒரு தனி சுகம். அதுலயும் அருவில குளிக்கும் போது எருமைமாடு மாதிரி ஆடாம அசையாம ஒரே இடத்துல நின்னுகிட்டே மேலே இருந்து விழுகிற தண்ணில நிக்கிற சுகமே அலாதியானது. குற்றாலத்துல குளிக்கப்போனா, டக்குனு குளிச்சுப்புட்டு வெளியே வராம, நல்லா நின்னு குளிங். வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்.

மெயின் அருவில கம்பிய பிடிச்சுக்கிட்டு, மேல இருந்து விழுற தண்ணில தடதடன்னு முதுகில அடி வாங்குற சுகம், ஐந்தருவில இடுக்குக்கு போய் குளிச்சுட்டு வர்ற த்ரில், பழைய குற்றாலத்துல நிதானமான குளியல், புலியருவில தொட்டிக்குள்ள நிக்கிற சுகம், இதெல்லாம் அனுபவிக்க குடுத்து வைக்கனும்.

அருவிக்கப்புறம் குற்றாலம் மக்கள். குற்றாலத்துல தெரிஞ்ச ஆள் இருந்து நீங்க தங்குற விடுதில, போன் பண்ணி கேட்டா, எப்ப வந்தா நல்லாருக்கும், அருவிகளில் தண்ணீர் விழும் நிலவரம், ரொம்ப டீடெய்லா சொல்வாங்க.

குற்றால அருவியை விட சுகம், அந்தப்பகுதி மக்களோட மனம். வழி மாறிப்போய் , யாரையாவது வழி கேட்டா வழி கரெக்டா சொல்வாங்க. அதை கேக்குற, பாக்குற, இன்னொரு ஆளும் "அண்ணாச்சி நீங்க வந்திட்டீக"ன்னு சொல்லி கரெக்டான வழி சொல்லுவாக.

அருவில குளிக்கும் போது எண்ணெய் தேச்சு ஊறவச்சு கொஞ்ச நேரம் கழிச்சு குளிங்க. புத்துணர்ச்சி தெரியும். ஆயில் மசாஜ்ல, எண்ணெய் தேச்சுவிட்டு உங்களை படுக்கப்போட்டு, உட்கார வைச்சு ஒரு உலுக்கு உலுக்கி எடுப்பான் பாருங்க, அது சுகம்.

குற்றாலம்னா குரங்குகள் இல்லாமலா? குரங்குகளுக்கு ஏதாவது குடுத்திட்டு வாங்க. குற்றாலத்துல ஜாதிக்காய் ஊறுகாய் தனிசுவை. அதை மாதிரி பன்னீர் கொய்யா, ரம்டான், மங்குஸ்கான் பழங்கள் அவ்வளவு இளசா இருக்கும். பதநீர் அவ்வளவு டேஸ்ட்டானது.

வீட்ல செடி வளக்குறவங்களுக்கு செடி வாங்க குற்றாலத்துல நிறைய நர்சரி இருக்கு. முக்கியமானது மெயின் அருவில இருந்து ஐந்தருவிக்கு போற வழில இருக்ற அட்சயா ஹோட்டல் பின்னாடி இருக்க போத்தி நர்சரி. அங்க வாங்கற செடிகள்ல வெரைட்டி இருக்கும். விலையும் ரொம்ப சீப். காக்ஸ்டல்ல பல ரகம், போன்சாய் மரக்கன்றுகள், என்ன செடி வேணும்னாலும் கிடைக்கும்.

பார்டர் புரோட்டாக் கடை, கேரளா பார்டர்னு நெனக்காதீங்க. செங்கோட்டைல, பிரானூர் பார்டர்னு ஒரு இடம் இருக்கு, அங்க இருக்க ரஹ்மத் புரோட்டாக்கடை ரொம்ப பிரபலம்.

குற்றாலம் வருஷத்துக்கு ஒரு தடவை போய்ட்டு வர வேண்டிய இடம்.

சினிமா விநியோகஸ்தர்கள் பைனான்சியர்கள்

இப்பவும் சினிமா பைனான்சியர்கள் இருக்காங்க. ஆனா மிக குறைந்த அளவுலதான். கைல காசே இல்லாம பைனான்சியர்கிட்ட கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்துக்குள்ள லாபமும் பாத்துக்கிட்டு வந்தாங்க ஒரு காலத்துல.

இப்ப பல்வேறு காரணங்களால படத்த குறிப்பிட்ட காலத்துக்குள்ள முடிக்க முடியறதில்லை. மொதல்ல படத்தை அடமானம் எழுதி வாங்கிட்டு பணம் குடுத்த பைனான்சியர் இப்ப படம் எடுக்கிறவங்க கிட்ட ஏதாவது சொத்து இருந்தாஅத எழுதி வாங்கிட்டு பணம் குடுக்கிறாங்க.

இப்ப சூழ்நிலை. கைல முழுசா காச வச்சிருந்தா தான் படம் எடுக்க முடியும். படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணவும் முடியும். அதேபோல பட விநியோகஸ்தகர்கள். அவங்களும் நெறயப்பேர் படம் விநியோகிக்கிறதை நிப்பாட்டிட்டு அவங்க தொழில பாத்துகிட்டு இருக்காங்க.

ஒரு காலத்துல திரைப்படங்கள் ஓடி, படத் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் திரையரங்கு உரிமையாளர் எல்லோருக்கும் லாபத்தை சம்பாதிச்சு கொடுத்தாச்சு.

எவ்வளவு நாளைக்கு படத்தை வாங்கி விநியோகம் பண்ணி நஷ்டப்பட முடியும்? விநியோகம் பண்றவங்க ரொம்ப கம்மி.

இப்பல்லாம் அதிக படங்கள் நேரடி ரிலீஸ் தான். தயாரிப்பாளரே நேரடியா திரையரங்குகளில் ரிலீஸ் பண்றாங்க.