Sunday, January 18, 2009

முனியப்பனின் யானைக் கனவுகள்

கனவுகளும், பலன்களும்

இது எந்த அளவுக்கு உண்மை ?

முனியப்பனுக்கும், யானைக்கும் எந்த பிறவில, என்ன தொடர்போ தெரியலை. முனியப்பன் கனவுல யானை வரும். பொதுவா அதிகாலை கனவு தான். சின்னப் பிள்ளைல இருந்தே முனியப்பன் கனவுல யானை வரும். அப்பல்லாம் அதுக்கு அர்த்தம் தெரியாது. இப்ப ஒரு 15 வருஷமாத்தான் அந்த யானைக் கனவுகளை அலசிப் பாக்குறார் முனியப்பன்.

யானை கனவுல வரும், லேசான கனவா என்ன ? யானை முனியப்பனை ஓட ஓட வெரட்டும். சமயத்துல, பயத்துல முனியப்பன் தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சு கூட ஒக்காந்திருவார். அப்ப ஹார்ட் படக்படக்னு துடிக்கும். படக் படக் நிக்கிறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். அவ்வளவு பயங்கரமா கனவு இருக்கும்.

சமயத்துல ஒத்த யானை வெரட்டும். சில சமயம் ஒரு யானைக் கூட்டமே முனியப்பனைக் கனவுல வெரட்டும். கனவுல யானை துரத்த, முனியப்பன் ஓட, சும்மா செம thrillஆ இருக்கும். Hollywood படமே எடுக்கலாம். செம chase.

இப்படித்தான் 1995 கடைசில, கனவுல, யானை & யானைக் கூட்டம் முனியப்பனை துரத்துச்சு. ஒரு மூணு மாசம் அப்பப்ப துரத்தும். தினசரி கெடையாது. 1996 பிப்ரவரி வரைக்கும். 1996 பிப்ரவரி 16ந் தேதி முனியப்பனோட ரோல்மாடல், அவுக அப்பா K.வேலுச்சாமி B.A., B.L. தமிழக அரசு நீதித்துறை நீதிபதி (ஓய்வு) மரணத்தைத் தழுவுறார்.

அப்புறம் கனவுல யானையக் காணோம். மறுபடியும் 1999ல யானை கனவுல வருது, ஒரு மூணு மாசம் அப்பப்ப gap விட்டு.1999 ஏப்ரல் 14ந் தேதி முனியப்பனோட பெரியப்பா போய்ச் சேந்துர்றார். அப்பத்தான் முனியப்பன் யானைக் கனவை அலசி, ஆராய்ஞ்சு பாக்குறார். "யானை கனவுல வந்தா, நம்ம வீட்டு ஆளு ஒண்ணு அவுட்ரா."

அப்புறம் யானைக் கனவக் காணோம். 2002 ல மறுபடியும் யானைக் கனவு. இந்த தடவை யானை என்ன செய்யுது ? முனியப்பன் வீட்டுக்குள்ள வந்து ஹால்ல ஒக்காந்துக்குது. முனியப்பனுக்கு ஒரே நடுக்கம். என்ன ஆகுமோன்னு பயம். பயந்தது மாதிரியே மே 11ந் தேதி அவரோட அன்புத்தம்பி மூர்த்தி இறந்துர்றார்.

மறுபடி 2005ல யானைக் கூட்டம் முனியப்பனைக் கனவுல துரத்துது. முனியப்பன் என்ன செய்வார் ? அவரும் ஓடுறார். 2003 மார்ச்ல முனியப்பனோட சித்தப்பா அவுட்.

07.01.09 மதியம் மறுபடியும் முனியப்பன் கனவுல யானை. ஒரு யானை முனியப்பன் வீட்டு முன்னால வந்து நின்னுக்கிட்டு "நீ வீட்டை விட்டு வெளிய வா பாப்பம்"னு முனியப்பனுக்கு சவால் விட்டுக்கிட்டிருக்கு. என்ன ஆகப் போகுதோன்னு முனியப்பனுக்குக் கவலை. இந்தத் தடவை பகல் கனவு. பகல் கனவு பலிக்காதும்பாங்களே, அப்படின்னும் ஒரு யோசனை, முனியப்பன் மனசுக்குள்ள ஓடுது. இருந்தாலும் கனவுல யானை, அதான் பயம். நெனச்ச மாதிரியே 09.01.09ந்தேதி முனியப்பன் அப்பாவோட தங்கச்சி அவுட். இந்தத் தடவை ரொம்ப speed. கனவு வந்த ரெண்டு நாள்ல result.

கனவுல யானை வெரட்டுனா முனியப்பனோட தந்தை வழி உறவுல ஒரு இறப்பு நிச்சயம். இது அனுபவப்பூர்வமான உண்மை.

இளவயது மரணங்கள்

தாய்தந்தை வளர்த்த பின்
தானே வளர்ந்து
ஒரு வேலை கிடைத்து
ஒரு வழியாக செட்டில் ஆகும் சமயம்

அனைவரும் ஆவலோடு அவன் வளர்ச்சியை
அவனை ஆசையாய் எதிர்பார்க்கும் நேரம்
அவன் மரணம் இளவயதில்
அது அனைவர் உள்ளத்தையும் உருக்குகிறது

உயிரை இழக்கும் அவன்
உயிரை எடுக்கும் காலன் கொடியவன்

முப்பது வயது முருகானந்தம்
மூளையில் புற்று நோய்
அன்பான காதலியையும்
அத்துடன் குடும்பத்தையும்
மரணத்தால் தவிக்க விட்டவன்

இருபத்தேழு வயது முருகேசனுக்கு
இடியோபதிக் திராம்போ சைட்டோ னிக் பர்ப்யூரா
மூளையில் கட்டுப்படுத்த முடியாத இரத்தக் கசிவு
முடிவில் மரணம்

முப்பது வயது மகேந்திரன்
மூளையில் கட்டி
மனைவி மகளை
மரணத்தால் பிரிந்தான்

24 வயது ராஜேஸ்வரியை மரணத்தால்
இரு பிள்ளைகளிடமிருந்து பிரித்த Blood Cancer

மாடியில் இருந்து தவறிவிழுந்து
மரணத்தைத் தழுவிய ராம்குமார் I yr B.com

மேல்நாட்டில் வேலைக்குச் சென்று
மேல்உலகம் சென்ற மோகன் குமார், கார்த்தி, வினோத்

சொல்லிக் கொண்டே போகலாம்
சொல்ல முடியாத இளவயது மரணங்கள்
என்ன பிழை செய்தார்கள் இவர்கள்
எதற்காக இறைவா இளம்வயதில் பறிக்கிறாய் ?

இது போன்ற இளவயது மரணங்களால்
இறைவா உனக்கு என்ன அல்ப சந்தோஷம்

படைப்பவனும் நீ
பாதியில் அழைப்பவனும் நீ
இனி இந்த விளையாட்டு போதும்
இதயங்கள் நொறுங்காமல் குடும்பங்கள் சிதையாமல்
காப்பது உன் வேலை
கலங்க வைக்காதே இனி ........

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் சிவனாண்டி

நீங்கள் சந்திக்காத மனிதர்கள்
சிவனாண்டியும் நாட்டுக்கோழி முட்டையும்

சிவனாண்டினா ... உடனே சின்னப்பையன்னு நெனச்சுராதீங்க. இவர் 80 வயசு பெருசு. மதுரைல பைபாஸ் ரோட்ல ஒரு எடத்துக்கு காவல்காரரா ரொம்ப வருஷமா இருக்கார். இந்த வயசுலேயும் தானே பொங்கிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலை

அவரோடது. அடுத்தவங்க செய்ற சின்ன சின்ன உதவிகள்ல அவர் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. சிவனாண்டி ஒடம்புக்கு சுகமில்லைன்னா நேரா கெளம்பி முனியப்பன் கிட்ட வந்துருவார். முனியப்பன் அவருக்கு வைத்தியம் பாத்து அவர் பீஸ் குடுத்தா வாங்கிக்குவார். பீஸ் குடுக்கலைன்னாலும் விட்ருவார். சிவனாண்டி பீஸ் குடுத்தாலும் 10 ரூபா தான் குடுப்பார். இப்ப கொஞ்ச நாளா அந்த 10 ரூபாவும் குடுக்கிறது இல்லை. இப்ப ஒருநாள் சிவனாண்டி ட்ரீட்மென்ட்டுக்கு வந்தார்.

வைத்தியம் பாத்து முடிச்சிட்டு கெளம்பும் போது நேரா முனியப்பன்கிட்ட வந்தார் சட்டைப் பைக்குள்ள கைய விட்டார். ஒரு Carry bag; அதை எடுத்தார். அந்த Carry bagல நாலு முட்டை, "நாட்டுக்கோழி முட்டை சின்ன வெங்காயம் சேத்து, ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க"ன்னார். முனியப்பன் ஒரு நொடி அசந்துட்டார். நம்ம மேல பெருசு இவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு.

இப்ப முனியப்பன் வீட்ல நாட்டுக்கோழி முட்டை ஆம்லேட்; சிவனாண்டி வந்துட்டார்னா. கிராமத்து மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமே தனி.

Tuesday, January 13, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Friday, January 9, 2009

எரியிற வீட்டில் ...

முனியப்பன், December 21 - 2008, போலியோ

போலியோங்கறது, இளம்பிள்ளை வாதம், சின்னப் பிள்ளைகளைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் வியாதி, ஒரு பக்க கால் நல்லா நடக்க முடியாம போயிடும். இந்த வியாதி, தடுப்பு மருந்துகள் மூலம் தடுக்கப்படக்கூடிய ஒன்று.

இந்தியாவுல போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இந்திய அரசாங்கம் வருடத்திற்கு ஒருமுறை, இந்தியா முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு45 நாள் இடைவெளியில் 2 தடவை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் கொடுக்கிறார்கள்.

2008 டிசம்பர் 21ல ஒரு முகாம் நடந்துச்சு, போலியோ சொட்டு மருந்து கொடுத்தாங்க. அதுலஒரு குழந்தை செத்துப் போய்ட்டதா திருப்பி, திருப்பி TVல FLASH பண்றாங்க. என்ன ஆகும்? சின்னப்பிள்ளைங்க இல்லையா.. எல்லா ஊர்லயும் தாய்மார்கள் பதறிப்போய் அவங்கவங்க பிள்ளைய தூக்கிட்டு பக்கத்துல இருக்க அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்குப் பறக்கறாங்க.

முனியப்பன் அவர் கிளினிக்ல சாயங்காலம் 5.30 மணிக்குத் தொழில ஆரம்பிக்கிறார். ஒண்ணொண்ணா பிள்ளையத் தூக்கிட்டு வர ஆரம்பிக்கிறாங்க. "போலியோ சொட்டு மருந்து கொடுத்தோம், பிள்ளை நல்லா இருக்கான்னு செக் பண்ணுங்க".

முனியப்பன் TV என்னைக்காவது பாக்குற ஆளு, அதுனால TVல தனிப்பட்ட ஆதாயத்துக்காக Flash பண்ண News அவருக்குத் தெரியாது. பிள்ளையத் தூக்கிட்டு வர்றவங்க தான் சொல்றாங்க "TV ல சொல்றாங்க. அந்த ஊர்ல போலியோ சொட்டு மருந்து கொடுத்து ஒரு பிள்ளை செத்துப்போச்சு, ஒங்க பிள்ளைய பக்கத்துல இருக்க டாக்டர்கிட்ட காமிச்சுக்குங்கன்னு சொல்றாங்க."

முனியப்பன் உடனே அவருடைய நண்பர் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர்.சம்பத்-ஐ தொலைபேசியில் ஆலோசனை கேட்கிறார். டாக்டர். சம்பத், போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால் எதுவும் வராது என்று பதட்டத்துடன் வரும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கும்படி சொல்கிறார்.

பொன்மேனில 2 பிள்ளை செத்துப்போச்சு, மாப்பாளையத்துல 5 பிள்ளை செத்துப்போச்சு, ஆரப்பாளையத்துல 2 பிள்ளை செத்துப்போச்சு இப்படியான புரளி தகவலுடன் முனியப்பனிடம் கூட்டம். முனியப்பன் அவரிடம் வரும் பிள்ளைகளைப் பரிசோதித்து பெற்றோரிடம் "பிள்ளை நல்லா இருக்கு, பயப்படாதீங்க" அப்படின்னு சொல்லி அனுப்புறார்.

இந்த தலைப்புல எழுதக் காரணம் இருக்கு. Flash பண்ணிய TV தனிப்பட்ட ஆதாயத்துக்காக, அது அரசியல். அது நமக்குத் தேவையில்லை. தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த சம்பவத்தால், அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமல்ல, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் போலியோ சொட்டுமருந்து கொடுத்த பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு பெற்றோர்கள் குவிந்தனர்.

அரசு ஆஸ்பத்திரிகளில் ஆலோசனை இலவசம். பல தனியார் மருத்துவர்களும் இலவசமாக ஆலோசனை வழங்கினர். சில தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆலோசனைக்குக் கட்டணம் வாங்கினர். தனியார் என்று வரும் பொழுதே ஆலோசனைக்குக் கட்டணம் தான். அதில் தவறில்லை.

கொடுமையான விஷயம், ஒரு சில தனியார் மருத்துவமனைகளில், "மாற்று மருந்து போடுகிறோம்னு" சொல்லி ஊசி போட்டு பணம் பறித்தனர். இவர்களை சக மருத்துவர் என்று சொல்லவே வெட்கமாயிருக்கிறது. அது ஒரு அவசரமான சூழ்நிலை. அன்னைக்கு சமூக கடமையாற்றாமல் மக்களை ஏமாற்றி சுரண்டியது எந்த வகையில் சேரும் என்று புரியவில்லை. "எரியற வீட்டில் புடுங்கியது ஆதாயம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

நம்மாளு முனியப்பன் என்ன செஞ்சிருப்பார். அவர் தான் பொழைக்கத் தெரியாத ஆளாச்சே. ஒருத்தர் கிட்டயும் பணம் வாங்கவில்லை. அவர் போலியோ சொட்டு மருந்து ஆலோசனை வழங்கியது 210 பேருக்கு.

Tuesday, January 6, 2009

CASE SHEET (நச்சுக்கொடி)

முனியப்பனும் நச்சுக்கொடியும்

பிரசவ நேரத்துல மொதல்ல தண்ணிக்குடம் உடையும், அடுத்து பிள்ளை பிறக்கும். கடைசியா நச்சுக்கொடி என்ற நஞ்சுக்கொடி (Placenta) வெளியேறும். இது Normal Procedure. சமயத்துல நச்சுக்கொடி வெளியேறாமா நச்சுக்கொடி உள்ளேயே இருந்துக்கிடும். Retained Placenta. அதை வெளியேத்தணும். ஆச்சா, இதுல நம்ம முனியப்பன் எங்க வர்றார் பாருங்க ...

முனியப்பன் அப்ப இளம் மருத்துவர். அப்பத்தான் மருத்துவம் படிச்சு முடிச்சு Private practice ஆரம்பிக்கிறார். எடம் நெல்லை மாவட்டத்துல ஆராம்பண்ணை கிராமம். Note பண்ணிக்குங்க, நம்மாளு ஒரு கிராமத்துல 3 வருஷம் மருத்துவம் பாத்திருக்கார். கிராமப்புற மருத்துவம்.

அந்த கிராமம் முஸ்லீம் சமுதாயத்தினர் பெருமளவு வசிக்கிற கிராமம். மிகவும் பக்தியான Orthodox முஸ்லீம் கிராமம். அப்ப ஒருநாள் அங்க ஒரு பொண்ணுக்கு டெலிவரி. பிரசவம் அரசு ஆஸ்பத்திரில உள்ள உதவி செவிலியர் பாக்குறாங்க. பிள்ளை பிறந்துருச்சு, நச்சுக்கொடி வரலை. எவ்வளவு முயற்சி பண்ணியும் வரலை. "என்ன செய்யலாம், முனியப்பனைக் கூப்பிடு". முனியப்பனைக் கூப்பிட்டு விடுறாங்க.

முனியப்பன் உபகரணங்களோட அவங்க வீட்டுக்குப் போனா 100 - 120 பேர் வீட்டுக்கு வெளியே, வீட்டுக்கு உள்ள 20 - 30 பெண்கள். முனியப்பன் நெல்லை மருத்துவக் கல்லூரில படிச்சவர் இல்லையா, தொழில்ல, ஜகஜ்ஜால கில்லாடி. ரெண்டு நிமிஷத்துல நச்சுக்கொடிய (Placenta) வெளியே எடுத்து அவங்க கைல குடுத்துட்டு வந்துர்றார். அவங்களுக்கு பரம திருப்தி.

அந்தக் கிராமம் தான், முனியப்பனுக்கு கிராமத்து மக்களோட பாசத்தையும், அன்பையும் சொல்லிக் கொடுத்தது. இன்னைக்கு 24 வருஷம் கழிச்சும், அங்க போய்ட்டு வர்றார் முனியப்பன்.

O&G பிரசவம் பாக்கறதுல கெட்டிக்காரர்கள் ஆண் மருத்துவர்கள் தான்.

ஆதி காலத்து Dr. நோபிள் அப்புறம் G.பழனிச்சாமி, பாஸ்கர் ராவ், Dr. பழனிவேல் இப்பொழுது Dr.கோபிநாத், Dr.ரத்தினகுமார், Dr.ஸ்ரீராம்குமார், Dr.குரியன் ஜோசப்

CASE SHEET (ஸ்டார்ட்டிங் டிரபிள்)

Two வீலர்ல ஸ்டார்ட்டிங் டிரபிள் வரும். Four வீலர்ல வரும். Lifeலயும் வரும்.
எப்ப... ?

வாழ்க்கைல முக்கியமான விஷயம் கல்யாணம். கல்யாணம் முடிஞ்ச உடனே பர்ஸ்ட் நைட். அங்க வர்ற ஸ்டார்டிங் ட்ரபிள்தான் இந்த டாபிக். எல்லாருக்கும் இது வராது. ஏன்னா மன்மதக் கலை சொல்லித் தெரிவதில்லை. ஒரு சிலருக்குத் தான் இது.

அதுல ஒரு சிலர் முனியப்பன்கிட்ட கல்யாணத்துக்கு அடுத்த நாளே வந்துருவாங்க. சார், அண்ணே அவங்களுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடுவாங்க. வீர விளையாட்டுல்ல, அதுல ஃபெயில் ஆனா எப்படி இருக்கும் ...? மானப் பிரச்சனை.

பொதுவா பயம், செயல்படுறதுல குறைபாடு, அறியாமை இதுல ஒண்ணு தான் இருக்கும். கொஞ்சம் பயத்தைப் போக்கிட்டோ ம்னா போதும். அன்னைக்கே கரெக்டாயிரும். சுருங்கிப்போய், பதறிப்போய் வந்த மூஞ்சி, அடுத்து வரும் போது புன்னகையோடு மலர்ந்திருக்கும் பாருங்க, கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இமயத்தில் கொடி நாட்டிய சந்தோஷம்.