Sunday, June 7, 2009

DIABETIC RETINOPATHY - ஏட்டையா

முனியப்பன் clinic வச்சிருக்க ஏரியால ஒரு ஏட்டையா (Head Constable) . மதுரை S.S.காலணி போலீஸ் ஸ்டேஷன்ல வேல பாத்துக்கிட்டிருந்தார். நீரிழிவு (Diabetes) வியாதிக்காரர்.

ஒரு நாள் முனியப்பன் அவரை ரோட்ல கிராஸ் பண்ணும் போது பாக்குறார். ஏட்டையா ரொம்ப மெலிஞ்சிருந்தார். முனியப்பன் டூ வீலரை நிப்பாட்டி ஏட்டையாவ clinic வரச் சொன்னார். டெஸ்ட் பண்ணிப் பாத்தா ரத்தத்துல சுகர் கண்டபடி எகிறியிருக்கு. TB வியாதி வேற நுரையீரலத் தாக்கியிருக்கு. சுகருக்கு இன்சுலின் போட்டு, TBக்கும் ஊசி, மாத்திரை குடுத்து முனியப்பன் ஏட்டையாவ சுகமாக்கிர்றார். ஒரே ஒரு அட்வைஸ் ஏட்டையாவுக்கு. தண்ணி அடிக்கக்கூடாது. ஏன்னா, ஏட்டையா சூப்பர் தண்ணி பார்ட்டி.

தண்ணி அடிக்காதன்னா யாராவது கேப்பானா...? ஏட்டையா ஊத்துறார். போலீஸ் யூனிஃபார்ம்லேயே எங்கயாவது flat ஆகி ரோட்ல கூட படுத்துக்கிடப்பார். யாராவது தெரிஞ்ச ஆள் அவரத் தூக்கிக்கொண்டு போய் அவர் வீட்ல விட்ருவாங்க.

முனியப்பன் கிட்ட ஏட்டையா அப்பப்ப வருவார். ரத்தத்துல சுகர் 300க்கு கொறையாது. முனியப்பன் சத்தம் போடுவார். ஏட்டையாவா கேக்குற ஆளு. 'அவன் கெடக்கான் டாக்டரு'ன்னு அவர் மனசுக்குள்ளயே வச்சிக்கிருவார். டெய்லி தண்ணி தான்.

ஒரு தடவை விராட்டிபத்து போலீஸ் செக்போஸ்ட்ல 150 ஃபுல் பாட்டிலோட ஒரு ஆட்டோ வ நிப்பாட்டிர்றாங்க. பாண்டிச்சேரிலருந்து கடத்திக்கிட்டு வந்த சரக்கு. ஆட்டோ வ விட்டுட்டு அதுல வந்த மூணு பேரும் எறங்கி ஓடுறானுவ. செக் போஸ்ட்ல நம்ம ஏட்டையாவும் டூட்டில இருக்கார். ஏட்டையாவ பாட்டில பாத்துக்கிட சொல்லிட்டு SI யும் ரெண்டு கான்ஸ்டபிளும் ஓடுறவங்களைப் பிடிக்க ஓடுறாங்க. எவன் பிடிபடுவான் ... ? மூணு பேரும் எஸ்கேப். SI திரும்பி வந்து பாத்தா, அந்த நாலுல ஒரு பாட்டில ஓபன் பண்ணி முக்காவாசியக் குடிச்சி முடிச்சிட்டார் நம்ம ஏட்டையா. எவ்வளவு சின்சியரான டூட்டி பாருங்க...?

குடியும் சுகரும் பிரண்ட்ஸ். குடிக்க குடிக்க சுகர் கொறையாது. இது நடைமுறை, குடிய நிப்பாட்டுனா சுகர் கொறையும். நம்ம ஏட்டையாவா குடிய நிப்பாட்டுற ஆளு.

டெய்லி குடிக்கறதுக்கு எதாவது நடக்கணும்ல. அதெப்படி நடக்காம இருக்கும். ஏட்டையாவுக்கு கைல, கால்ல வெரல்ல புண்ணு வர ஆரம்பிச்சது. வெரல் அழுகி (Diabetic Gangrene) ஏட்டையா கைலயும், கால்லயும் 6 வெரல கட் பண்ணி எடுத்தாச்சு.

வெரல் போனா என்ன...? குடிய நிப்பாட்ட முடியுமா? ஏட்டையா குடிச்சிகிட்டே இருக்கார். கண்ல பார்வை கொறைய ஆரம்பிக்குது. தமிழ்நாட்ல உள்ள எல்லா கண் ஆஸ்பத்திரிலயும் காட்டுறார். சுகரக் கண்ட்ரோல் பண்ணாததால (Uncontrolled Diabetes) பார்வைக்கு வாய்ப்பில்லை. லேசர் தான் வைக்க முடியும், மேஜிக் மாதிரி எதுவும் செய்ய முடியாது அப்படின்னு சொல்லிர்றாங்க. கண்ணோட கதை முடிஞ்சிருச்சு.

டூ வீலர்ல முனியப்பன்கிட்ட தானே வந்தவர், கொஞ்ச நாள் கழிச்சு நடந்து வர்றார் (கண் பார்வை கொறையுதுல்ல...). நடந்து வந்தவர், அப்புறம் அதுவும் முடியாம ஆட்டோல வர்றார். ஒரு நிதானத்துல வீட்டுக்கு பக்கத்துல இருந்த கடைக்குப் போய்க்கிட்டிருந்தார். இப்ப அதுவும் முடியாம வீட்டுக்குள்ளேயே மொடங்கிக் கெடக்குறார். வீட்டுக்குள்ள நடக்கிறதுக்கே யாராவது help பண்ணனும்.

கண் கெட்ட பெறகு சூர்யநமஸ்காரம்பாங்க. கண் பார்வை முழுசா போன பெறகு இப்ப நம்ம ஏட்டையா இப்ப குடிக்கறதில்லை.