Monday, October 26, 2009

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம்

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்



I. புகுமுன் உங்களோடு ...



ஈழம் என்னும் நிலப்பகுதி தமிழர்களுடையது. இலங்கையும் தமிழ்ச்சொல். இலங்கை முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தினர்.

காலப்போக்கில் அவர்களது ஆட்சி எல்லை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் உள்ளதாக மாறியது.



ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கை நாளாவட்டத்தில் சிங்களர் தம் குடியேற்றம் மற்றும் அடக்கு முறையால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் ஈழமாகச் சுருங்கியது. சோழ அரசன் ராசராசன் மெய்கீர்த்தியில் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டிலமும் என்று தமிழர் பகுதிகளையும்

சிங்களர் பகுதிகளையும் வரையறுத்திருக்கிறது.



சிங்களர்களின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் கூற்றுப்படி பார்த்தாலும் சிங்களர்கள் இலங்கையில் வந்து குடியேறியவர்களே. சிங்களர்களின் முதல் அரசன் ஒரு கப்பலில் இலங்கையில் வந்து குடியேறியதாகக் குறிப்பிடப்படுகிறது.



ஈழத்து உணவும் என வரும் பட்டினப்பாலை வரிகள் சோழ அரசன் முதலாம் கரிகாலன் காலத்தைச் சேர்ந்தது. முதலாம் கரிகாலனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. முதலாம் கரிகாலன் ஈழத்தில் நாட்டிய வெற்றிகள் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட வில்லை. எனவே சிங்களரின் இலங்கை குடியேற்றமும், மகாவம்சமும் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பது தெளிவாகிறது.



வெளியில் இருந்து வந்து இலங்கையில் குடியேறிய சிங்களர்கள் நாளாவட்டத்தில் தமிழர்களை விரட்டியடித்து அவர்கள் பரப்பைச் சுருக்கினார்கள். இலங்கையின் விடுதலைக்குப் பின்னர் தமிழர்கள் மேல் வன்முறையையும், காழ்ப்புணர்ச்சியையும் கட்டவிழ்த்து விட்டு ஈழத்திலிருக்கும் 30 லட்சம்

தமிழர்களையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுச்சாம் என்ற வார்த்தை சிங்களக் காடையர்களுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.



ஈழத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் சிங்களருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த சிங்கள அரசு சமீப காலமாகத் தமிழர்களை அழிக்கும் இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ளது.



இந்த இன ஒழிப்பை, ஈழத்தமிழர் தம் அடிமைத்தளையை மாற்றப் பிறந்தது தான் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம்.



இந்த உரிமைப் போராட்டத்தை வரலாற்றுக் காலத்திலிருந்து பார்ப்போம். அதன்பின் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தை அதன் பலம், பலவீனத்தை

ஆராய்வோம்.



II. ஈழம் ... சரித்திரச் சான்றுகள்



எந்த ஒரு நாட்டுக்கும் தனி வரலாறு உண்டு. ஈழத்துக்கும் உண்டு. ஈழத்தில் தமிழ் வரலாற்றுச் சான்றுகள் நிறைய உண்டு.



ஈழத் தமிழகத்துக்கும் தனித் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு வரலாற்றுக் காலத்துக்கும் முற்பட்டது. ஐராவதம் மகாதேவன், தொல்பொருள் ஆய்வாளர்.



மெகாலித்திக் சான்று



மனித வரலாற்றைச் சொல்லும் பொழுது வரும் காலங்களில் ஒன்று மெகாலித்திக் காலம். இந்தக் காலங்களில் இறந்த மனிதர்களை அடக்கம் செய்வதில் சில முறைகளைக் கையாண்டார்கள். தமிழர்களின் முதுமக்கள் தாழி பிரசித்தி பெற்றது.



யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள அனகோடையில் உள்ள புதையல் இடத்தில் எடுக்கப்பட்ட வெள்ளி முத்திரை முக்கியமானது. C14 அளவீடு மூலம்

பழங்காலத்தை அளவிடுகிறார்கள். தமிழர்களின் மெகாலித்திக் சான்றுகளை C14 மூலம் 1050 கி.மு. முதல் 500 கி.மு. வரை அளவிடுகிறார்கள்.



அனக்கோடையில் கிடைத்த வெள்ளி முத்திரையில் உள்ள எழுத்து கோ வே தா என்ற தமிழ் எழுத்து.



பானையில் தமிழ் எழுத்து



தமிழ் பிராமி எழுத்துக்களைக் குகைகளிலும், பானைகளிலும் ஆரம்ப காலத்தில் பொறித்தார்கள். காலம் கி.மு. 200க்கு முன்னால். யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறித்த உடைந்த மண் பானைகள் ஏராளம். அவற்றில் ஒன்றில் பொறிக்கப்பட்ட வார்த்தை வேலன்.



ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட காசுகள்



ஒரு நாடு நாகரீகம் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே பொருளாதாரத்துக்காகக் காசுகள் வெளியிட முடியும். ஈழத்தில் தமிழர் ஆட்சி சீரும் சிறப்புமாக இருந்ததை அங்கு அரசாண்ட தமிழ் மன்னர்கள் வெளியிட்ட தமிழ் பொறித்த 200 கி.மு. காலத்தை ஒட்டியுள்ள மூன்று ஈயக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் முறையே மகா கட்டன், கபடி கட்டன் மற்றும் உத்திரன்.



இவை ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மன்னர்களின் காசுகள், கண்டுபிடிக்கப்பட்ட இடம் இலங்கையின் தென் கிழக்கே உள்ள திசாமகரம.



பாண்டியர் காசுகள்



பாண்டியர்கள் தான் ஈழத்தோடு நட்போடும் சுமூகமான உறவோடும் இருந்தார்கள். சங்க காலப் பாண்டியர் கால செப்புக் காசுகள் 4 ஈழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



மன்னன் விசயன்



முதல் ஈழத்தமிழ் மன்னனாய் அறியப்படும் விசயனின் காலம் புத்தர் நிர்வாணமாகிய கி.மு. 478. விசயன் பாண்டியர் குலப் பெண்மணியை மணந்தானென்றும், தன் மாமனாகிய பாண்டியனுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தானென்றும் வரலாறு சதாசிவப் பண்டாரத்தார்



இதே விசயனைத்தான் சிங்களத்தின் முதல் மன்னன் என்று மகாவம்சம் வரலாற்றைத் திரித்துக் கூறுகிறது.



குகை கல்வெட்டுக்கள்



தமிழன் முதலில் தன் தமிழை எழுத்தாகக் குகைகளில் தான் பொறித்தான். தமிழனுடைய குகை கல்வெட்டுக்கள் ஈழத்தில் நிறைய உண்டு. ஈழத்தில் உள்ள குகைக் கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழருடையதே என்று கூறுகிறார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பார்க்கர்.



இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பம்பரகஸ்தவலாவில் உள்ள குகைக் கல்வெட்டுக்களில் தமிழனின் எழுத்து சிறப்பாக உள்ளது. தமிழனுக்கே

உரிய ல அங்கு இடம் பெறுகிறது.



ஈழத்தில் இருந்தவர்கள் தமிழர்கள், ஆகவே அங்கு அவர்கள் எழுத்துத் தானே இருக்கும். இலங்கையில் உள்ள குகை கல்வெட்டுக்களின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு.



தமிழ் மன்னர்களும் ஈழமும்



கடலுக்கப்பாற் பட்ட தலைத் தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழகத்துக்கும் இடையே உள்ள சங்ககால உறவு, பெரும்பாலும் சோழர், சேரர், படையெடுப்பாக இருந்துள்ளது . பாண்டிய நாட்டுத் தொடர்பு மன்னர் நேசத் தொடர்பாகவும் அத்துடன் மன்னர் மக்கள் மண உறவுத் தொடர்பாகவும் இருந்துள்ளது.



சோழர் ஈழப்போர் பாடல்கள்



1. ஈழமும் தமிழ்க்

கூடலும் சிதைத்து - பராந்தகச் சோழன்



2. தென்னன் நாடும்

ஈழமும் கொண்ட திறல் - கண்டராதித்த சோழன் - 9ம் திருமுறை



3. மதுரைத் தமிழ்ப் பதியும்

ஈழமும் கொண்ட

இகலாளி - குலோத்துங்கச் சோழன் - உலா



4. ஈழம் எழுநூற்றுக்

காவதமும் சென்று எறிந்து - ராசராச சோழன் உலா



5. முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும் - ராசராசன் மெய்கீர்த்தி



முக்கியமான வரிகள். ராசராசன் போர் செய்தி தான் ஈழத்தில் எழுநூற்றுக் காத தூரம் சென்று , முரண் தொழில் சிங்களர் ஈழமண்டலமும். சிங்களர் ஈழ மண்டலம் என்று ராசராசன் காலத்தில் தமிழ் ஈழத்தையும், சிங்களர் ஈழ மண்டலத்தையும் பிரிக்கிறார்கள் பாருங்கள். அத்துடன் நிற்காமல் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலம் என்று அவர்களுடைய தவறான தொழிலையும் சொல்கிறது இந்த வரிகள்.



சிங்களரின் நூலான மகாவம்சத்தில் கரிகாலன் (கி.மு. 3 ம் நூற்றாண்டு) ஈழத்தை வென்றதைக் குறிப்பிடவில்லை. அதற்குப் பின் வந்த மற்ற இலங்கை

வரலாற்று நூல்கள் சோழன் கரிகாலனின் வெற்றியைக் குறிப்பிடுகின்றன.



ஆக, மகாவம்சம் என்பது இன்றைய தொலைக்காட்சிகளைப் போல தனக்கு வேண்டியதை, பாசிட்டிவாக உள்ளதை மட்டும் எழுத்தாக்கியிருக்கிறது. சில

தொலைக்காட்சிகளைப் போல பொய்கள் நிறைய கலந்திருக்கிறது.



பாண்டியன் நெடியோன்



சங்க காலத்திலேயே பழங்காலப் பாண்டியருக்கு முற்பட்ட பாண்டியனாக நெடியோன் விளங்குகிறான். அவனது தலைநகர் ப·றுளி ஆற்றின் கரையில்

அமைந்திருந்தது.



ப·றுளியாற்றுடன் பன்மலை படுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள - சிலப்பதிகாரம்



நெடியோன் காலத்துக்கு அப்பால் இலங்கைத் தமிழகமும், தலைத் தமிழகமும் கடலால் பிரிவுற்று வேறு வேறு நிலப்பகுதிகளாயின.



மெகஸ்தனிஸ்



கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய வருகை காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. வரலாற்றுப் பதிவாளர்.



இவர் இந்தியாவைப் பற்றி பல குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். அதில் முக்கியமான ஒன்று தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு ஆறு

ஓடிக்கொண்டிருந்தது. ஆக தலைத் தமிழகமும், ஈழத் தமிழகமும் கடலால் பிரிக்கப்படுமுன் ஒன்றாகத்தான் இருந்தன.



தலைத் தமிழகத்தையும் ஈழத்தமிழகத்தையும் பிரித்த கடல்கோள் கிமு 69ல் என்று குறிப்பிடப்படுகிறது.



கெளதம புத்தர்



அரசராயிருந்து, திருமணம் செய்து மகனையும் பெற்றெடுத்த பின்னர் துறவியானவர் சித்தார்த்தர்.



கயா எனும் நகரில் போதி மரத்தடியில் 12 ஆண்டுகள் ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார். அப்பொழுது ஒரு நாள் இனிய ஞானம் கிடைக்கப்பெற்றார். அக்கணத்திலிருந்து புத்தர் என்றும் சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார்.



புத்தருடைய போதனைகள் அகிம்சையையும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவதையும் அடிப்படையாகக் கொண்டவை. புத்தருடைய காலம் கி.மு. 567 - கி.மு. 487



அசோகர்



மெளரிய அரசர்களுள் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவர் அசோகர். தலைநகரம் பாடலிபுத்திரம். கயாவிற்கு அருகில்.



முதலில் சிவனை வழிபட்டவர், கிமு261 ல் நடைபெற்ற கலிங்கப்போரில் மக்கள் இறந்ததை காயமுற்றதை அடுத்து மனம் மாறி பெளத்த மதத்தைத் தழுவினார்.



புத்த சமயம் பரப்ப அசோகர் பெரும்பாடு பட்டார். பல நாடுகளுக்கு புத்த துறவிகளை அனுப்பி வைத்தார்.



அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பி புத்த சமயக் கொள்கைகளை பரப்பினார். அசோகருடைய காலம் கிமு273 / கிமு232.



அசோகருடைய கல்வெட்டுக்களில் தமிழகத்தை ஆண்ட பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.



பொலந்தருவா



இங்கு உள்ள புத்த விகார் தான் இலங்கையில் உள்ள பழமையான புத்த மத அடையாளம். இதனுடைய காலம் 2000 ஆண்டுகள்.



கண்டி புத்தரின் பல்



புத்தரின் பல் இருக்கும் கண்டி நகர் இலங்கையில் புத்தர்களின் புனித இடமாக உள்ளது. புத்தரின் பல் இலங்கை வந்தடைந்த ஆண்டு கி.பி. 4ம் நூற்றாண்டு.



III. தமிழகத்தில் ஈழம் பற்றிய குறிப்புகள்



மதுரைக்கு அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குகைக் கல்வெட்டு காலம் கிபி 3ம் நூற்றாண்டு.



எருகோ டூர் ஈழகுடும்பிகன் போலாலயன்

செய்தா ஆய்ச்சயன் நெடு சாத்தன்



ஈழத்திலிருந்து வந்து ஈழகுடும்பிகன் கல் படுக்கை செய்ய பொருளுதவி செய்திருக்கிறான்.



ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்



கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை



பட்டினப்பாலையின் காலம் சோழ மன்னன் முதலாம் கரிகாலனுடைய கி.மு. 3ம் நூற்றாண்டு.



IV. ஈழவர்கள்



கேரளாவில் தென் திருவாங்கூரிலும், மத்திய திருவாங்கூரின் சில பகுதிகளிலும் இருக்கின்றனர். ஈழத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். ஈழம் இலங்கைக்குரிய

தொன்மையான பெயராகும். ஈழத்திலிருந்து புறப்பட்டே ஈழவர்கள் முதன்முதலாக மலபாரை வந்து அடைந்ததாகக் கருதுகின்றனர்.



ஈழவர்கள் கேரளாவின் மேற்குக் கடற்கரையில் வந்து குடியேறியதாகவும் ஒரு வழக்கு வழங்கி வருகிறது. ஈழவர்கள் என்ற பட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேளாளர் சிலர் தரிப்பதும் குறிப்பிடத்தக்கது.



கிபி 824ல் உள்ள ஒரு பட்டயத்தில் (வரலாற்றுச் சான்று ஆவணம்) ஈழவர்களின் பணி தரிசு நிலங்களில் மரங்களை நடுவதே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



V. சேரன் செங்குட்டுவன் கிபி 2ம் நூற்றாண்டு



பிந்தைய கால சேர அரசர்கள் பெளத்த மதத்தை ஆதரித்ததாகச் சொல்லப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்துச் சிறப்பித்ததாகவும், அப்படி நடந்த ஒரு விழாவில் சிங்கள மன்னன் கயவாகு கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆக, ஈழவர்கள் ஈழத்திலிருந்து கேரளாவின் மேற்குக் கரையோரம் குடியேறியது கயவாகுவின் காலத்திற்குப் பின்தான்.



ஈழவர்கள் தான் முதன்முதலாக ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள். அவர்களும் முரண் தொழில் சிங்களரின் வன்முறையால் புலம்பெயர்ந்ததாக எண்ண இடமுண்டு.



VI. சங்கமித்திரை - மணிமேகலை



இருவரும் சரித்திர காலப் பெண்டிர். சங்கமித்திரை பேரரசர் அசோகரின் மகள். மணிமேகலை சிலப்பதிகாரக் கோவலனின் மகள்.



சங்கமித்திரை இலங்கையில் காலடி வைத்தது புத்த மதத்தைப் பரப்ப, காலம் சுமார் 240 கிமு. சங்கமித்திரை இலங்கையில் கால்பதித்த இடம் மணிபல்லவம் துறைமுகம். அங்கு அவளை இலங்கை அரசன் தேவனாம்பிரிய தில்ஸன் வரவேற்றதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது.



மணிபல்லவம் ஈழத்தின் யாழ்ப்பாணத்துக்கு வடகோடியில் உள்ள ஒரு சிறு தீவு. தமிழ் நாட்டில் இருந்து கிழக்கே கடல் மார்க்கமாக நெடுந்தூரம் போகிற கப்பல்கள் வந்து தங்கி குடிநீர் எடுத்துக்கொள்ளும் இடமாகவும் இருந்தது. இங்கு மகாவம்சத்தால் பொய்யாக உரைக்கப்பட்டது. சங்கமித்திரையை

தேவானம்பிரிய தில்ஸன் வரவேற்றது. தேவானம்பிரியன் என்பது பேரரசர் அசோகரது இன்னொரு பெயர். சங்கமித்திரை வருகைக்குப் பின் புத்தமதப் பீடிகை அமைக்கப்பட்டது. அமைத்தவர்கள் அசோகரால் அனுப்பப்பட்ட புத்த பிக்குகள்.



கோவலன் மகள் மணிமேகலை பெளத்த மதத்தைத் தழுவிய பின்னர், மணிபல்லவஞ் சென்று அங்கிருந்த புத்த பாத பீடிகையை வணங்கி மீண்டும் தன் ஊருக்குத் திரும்பி வந்தாள்.



யாழ்ப்பாணத்தை ஆண்ட வளைவாணன் மகள் பீலிவனையைப் பற்றியும் மணிமேகலை காவியம் குறிப்பிடுகிறது.



சங்கமித்திரைக்கு 150 வருடங்கள் பிந்தியது. மணிமேகலை காவியம். அதில் புத்தபாத பீடிகையைக் குறிப்பு இருக்கிறது. ஈழத்தமிழ் மன்னனைப் பற்றிய

குறிப்பிருக்கிறது. மணிபல்லவம் பற்றி எழுதியிருக்கிறது. சிங்களனை ஏன் மணிமேகலை குறிப்பிடவில்லை? மகாவம்சத்தைப் போல பொய்யுரைக்க

மணிமேகலைக்குத் தெரியவில்லை.



VII. பொய்யுரைகள் நிறைந்த மகாவம்சம் - கி.பி. 500



மகாவம்சம் எனும் இலங்கையின் வரலாற்றை விளக்கும் நூல் எழுதப்பட்ட காலம் கிபி 5ம் நூற்றாண்டு. எழுதியவர் மகானம



பொய்யுரைகளால் தமிழர் வரலாற்றை மறைத்து எழுதப்பட்டது இந்த நூல்.



சங்க காலத்துக்கும் முந்திய ஈழத்தமிழர்களை, அதற்கடுத்த ஈழத்தமிழர்களை வந்தேறிகளாகக் காட்டும் கபடநூல் அது.



கி.மு. 478 ல் ஈழத்திலிருந்த தமிழ் மன்னன் விசயன், சிங்களரின் முதல் மன்னனாம் புத்த மதத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரையை மணிபல்லவம் துறைமுகத்தில் கி.மு. 240 - கி.மு. 230 ல் வரவேற்றது சிங்கள அரசன் தேவனாம்பிரிய தில்ஸனாம்.



சங்கமித்திரை இலங்கையில் கால் வைத்த பிறகுதான் புத்தமதம் இலங்கைக்குள் கால் வைத்தது. தேவனாம்பிரியன் என்பது அசோகரது பெயர். மணி பல்லவம் ஈழத்தமிழ் அரசர்கள் ஆண்ட பகுதி.



துட்டகமுனு - ஏலாரன், போருக்குப் பின் தான் ஈழத்தைப் பற்றியே சிங்களருக்குத் தெரியும். இந்தப் போரின் காலம் கி.மு. 1ம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1ம் நூற்றாண்டின் பின் பகுதி. இன்றும் ஈழத்தின் நிலப்பரப்பு இலங்கை ராணுவத்திற்கு முழுமையாகத் தெரியாது.



ஆக, விசயன் சங்கமித்திரையை தேவானம்பிரிய தில்ஸன் வரவேற்றது ஆகியன மகாவம்சத்தின் பொய்யுரையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.



இன்னும் எத்தனை பொய்யுரைகள் மகாவம்சத்தில் அடங்கியிருக்கின்றன என்பது கிபி 5ம் நூற்றாண்டில் எழுதிய மகானமக்குத் தான் தெரியும்.



VIII. ஈழத்தமிழர் சரித்திரம் - ஒரு ஆய்வு



ரத்தினச் சுருக்கமாக, ஈழம் தொன்று தொட்டு இருந்து வரும் தமிழர் பூமி. சிங்களர்கள் அவர்களது மகாவம்சத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி வந்தேறிகள். எங்கிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்பது இன்னும் நிச்சயிக்கப்பட வில்லை.



சங்கமித்திரை புத்த மதத்தைப் பரப்புவதற்கு இலங்கை வந்தாள். புத்த மதமம் ஈழத் தமிழர்கள் மனதை மாற்றி மதம் மாற வைக்கவில்லை.



சங்கமித்திரை பின் வந்த மணிமேகலையிலும் சிங்கள அரசர்கள் குறிப்பு இல்லை.



துட்டகமுனு தான் முதலில் தமிழர் பகுதிக்கு வந்த சிங்கள மன்னன். காலம் கி.மு. முதல் நூற்றாண்டு.



சங்கமித்திரை, மணிமேகலைக்கு காலத்தால் பிந்தியவன் துட்டகமுனு.



டச்சுக் காரர்கள் போர் புரிந்தது ஈழத்தமிழ் மன்னனான பண்டார வன்னியனுடன்.



டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்களுக்குப் பின் இலங்கையை ஆண்ட இங்கிலாந்துக் காரர்கள் இலங்கையைச் சுதந்திர நாடாக அறிவித்த போது தமிழர்கள் அவர்கள் உரிமையை மறந்து சிங்களர்களிடம் இலங்கையை ஒப்படைத்தார்கள். அதன் விளைவுகளை, சிங்கள வெறியை, தமிழ் இன ஒழிப்பை இப்போதும்

காண்கிறோம்.



ஈழத் திருநாட்டில் நாணயங்களை வெளியிட்டு ஆண்ட தமிழினம் இன்று ஒடுக்கப்பட்டு விட்டது.



IX. தமிழர் மீதான சிங்களர் இனவெறி



தமிழர்கள் மீதான இனவெறி சிங்களர்களுக்கு என்றும் மாறாது.



சிங்களர்களின் வெறியால் முதலில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தது, இன்றைய கேரளாவில் இருக்கும் ஈழவர்கள்.



அடுத்து இல்லத்துப் பிள்ளைமார் என்று தமிழகத்தில் அழைக்கப்படும் ஈழத்துப் பிள்ளைமார் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தனர்.



அடுத்து 1983 கறுப்பு ஜீலையில் சிங்களரின் வெறியாட்டத்தால் உலகெங்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்.



இலங்கையின் ஆட்சி மொழியாக, ஒரே மொழியாக, சிங்களரின் மொழி சிங்களம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆண்டு 1956



1958ல் தமிழர்கள் மீதான சிங்களக் காடையர்களின் இனவெறித் தாக்குதல் நடந்தது.



அடுத்து மிகப்பெரிய அளவில் தமிழர்கள் மீதான சிங்கள வெறியர்களின் இனவெறித் தாக்குதல் நடைபெற்ற ஆண்டு 1977.



யாழ்ப்பாணத்திலுள்ள நூலகம் தமிழர்களுக்கானது. ஈழத்தமிழர்கள் தங்கள் தாய்மொழி தமிழிலான நூல்களைப் படித்து வந்தனர். தமிழர்கள் தமிழைப் படிப்பதா? சிங்களர்களுக்கு எப்படிப் பொறுக்கும் ? நூலகம் சிங்களர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தீயில் எரிந்த நூல்கள் 90,000. ஆண்டு 1981.



ஈழப்போர் என்று சிங்கள இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட இனவெறி அடக்குமுறை அனைவரும் அறிந்ததே.



X. மறக்க முடியாத கறுப்பு யூலை 1983



ஈழத்தமிழர்கள் மனதில் ஆறாத வடுவாக இன்றும் இருப்பது 1983ல் ஜூலை மாத இறுதியில் நடந்த ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரமான தாக்குதல். ஜூலை 24ந் தேதி ஆரம்பித்து ஒரு வாரம் இலங்கை முழுவதும் தமிழர்கள் மீது நடந்த வெறித்தாக்குதல்.



சிங்கள வெறியர்கள் நடத்திய இந்தத் தாக்குதலை இலங்கை அரசும் இலங்கை காவல் துறையும் அடக்க முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழர் உயிர்கள்,

தமிழர் உடைமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை அரசு வெளியிட்ட இறந்த தமிழர்களின் எண்ணிக்கை 3000. உண்மையில் 10,000 பேருக்கு மேல்

கொல்லப்பட்டனர்.



வெளிக்கடை சிறையில் கைதிகளாக இருந்த 54 தமிழர்கள் சிங்கள சிறைத்துறையினரின் உதவியால் சிங்களக் கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு

உயிரிழந்தனர்.



தமிழ் ஆடவர்களை சிங்களக் காடையர்கள் நிர்வாணமாக்கி அழகு பார்த்த கொடுமையும் நடந்தது. ஈழத்தமிழ்ப் பெண்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள் ?



ஈழத்தமிழர்களின் மீதான இனஒழிப்பு இலங்கையின் சிங்கள அரசின் துணையுடன் நடந்தேறியது.



கருப்பு ஜீலையால் ஈழத்தமிழர்கள் இலங்கையில் இனி வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவானது. அந் நிலையில் சாரைசாரையாக ஈழத்தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறினார்கள். இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப் பட்டனர். இன்னும் அகதிகள் முகாம்களில் தான் இருக்கிறார்கள்.



இலங்கையை விட்டு வெளியேறி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அய்ரோப்பாவில் சுவிஸ், நார்வே, டென்மார்க், யேர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அங்கு குடியேறி அந்த நாடுகளில் கிடைத்த வேலையைப் பார்த்து அங்கேயே குடியுரிமை பெற்று தாய்த் தேசத்தின் மேல் உள்ள பற்றால் ஈழ விடுதலைக்காக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தாயகத்துக்காக, தாயகத்தை நினைத்து கண்ணீர் விடுபவர்கள் இவர்கள். இவர்கள் கண்ணீர் ஈழத்தில் தமிழனுக்கு சம உரிமையைப் பெற்றுத் தருமா?



XI. தனித்தமிழ் ஈழம் பிரகடனம்



மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் சொந்த மண்ணில் சிங்கள அரசாங்கத்தால், சிங்களக் காடையர்களால் அடிமையாக, உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்வதைப் பொறுக்காத ஈழத் தமிழர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் தான் தனித்தமிழ் ஈழம் அடைவோம் என்ற வார்த்தையை பொதுக்கூட்டத்தில் மக்கள் ஆரவாரத்துக்கிடையில் கூறினார்.



XII. புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், பிரபாகரனும்



விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம். சென்னை, தமிழகம், இலங்கை என்று விடுதலைப் புலிகள் அலைந்து கொண்டிருந்த நேரம்.



பிரபாகரன் அப்பொழுது முதல்வராயிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க நேரம் கேட்கிறார். சந்திக்கிறார்கள். கதைக்கிறார்கள்.



உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார்? எங்களுக்கு ஆயுதம் வாங்க நிதி உதவி வேண்டும் என்கிறார் பிரபாகரன். எம்ஜிஆர் எவ்வளவு தொகை ? பிரபாகரன் 2 கோடி ரூபாய் எம்ஜிஆர் நாளைக்கு வாங்க



அடுத்த நாள் பிரபாகரனும் பாலா அண்ணன் & மற்றைய தலைவர்களும் எம்ஜிஆரைச் சந்தித்து 2 கோடி ரூபாய் பெற்றுக் கொள்கிறார்கள். அப்பொழுது எம்ஜிஆர் நீங்கள் விடக்கூடாது, எதிரிகளுடன் போராட வேண்டும். ஆயுத உதவி எல்லாம் செய்கிறேன் என்று சொல்கிறார்.



இந்த சம்பவத்தைப் பிரபாகரனே பேட்டியாக சொல்லியிருக்கிறார். யூ ட்யூப்பில் இப்பொழுதும் பார்க்கலாம்.



பிரபாகரன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு 2 கோடி ரூபாய்ங்கிறது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய தொகை, அதை வச்சுத்தான் எங்கள் இயக்கம் வலுவானது.



XIII. இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல்



புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படப் பாடல் ஒன்று "அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா" அதில் வரும் வரி

"தாயகம் காப்பது கடமையடா"



விடுதலை உணர்வைத் தூண்டும் இந்தப் பாடலை ஒலிபரப்ப சிங்கள இனவாத அரசு தடைவிதித்துள்ளது.



விடுதலைப் புலிகள் இந்தப் பாடலை அப்படியே வைத்து காட்சிகளை மட்டும் விடுதலைப் புலிகள் தொடர்பான காட்சிகளாக வைத்துக் காணொளியாக

வைத்திருக்கிறார்கள்.



XIV. விடுதலைப் புலிகள்



ஈழத்தமிழர்களை அவர்களின் அடிமை நிலையை உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டியவர்கள் விடுதலைப் புலிகள்.



தமிழனைத் தொடாதே தொட்டால் புலிகள் வந்து அடிப்பார்கள் என்ற பயத்தைச் சிங்களர்களிடம் உண்டாக்கி வைத்திருந்தவர்கள் விடுதலைப் புலிகள்.



நான்கைந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் ஆயுதம் ஏந்திய போராளி இயக்கமாக உருவானது. 30 வருடங்கள், சிங்கள இலங்கை அரசின்

கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருந்த இயக்கம்.



உலகிலேயே வான்வழித் தாக்குதல் நடத்திய ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் அமைப்பு தான்.



தலைமைக்குக் கட்டுப்பட்ட போராளிகள், இவர்களின் சிறப்பம்சம் சீருடை & உயிரிழந்த போராளிகள் தினமாக நினைவு கூறப்படும் மாவீரர் நாள்.



இவ்வளவு சிறப்பம்சம், பொருளாதார உதவிகள் இருந்தும் தங்கள் குறிக்கோளை எட்ட முடியாததற்கு காரணங்களாக பல உள்ளன.



முதலில் இயக்கத்தில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் ஒழிக்கப்பட்டனர். ஆலோசனை சொன்னவர்கள் அழிக்கப்பட்டனர்.



அடுத்து, மற்ற போராளிக் குழுக்களை இயக்கத்தினர் அரவணைத்துச் செல்லவில்லை.



1990க்குள் மற்ற போராளி இயக்கங்களை, அதில் உள்ளவர்களை அழித்து ஒழித்தனர்.



1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து 28000 முஸ்லீம்களை வெளியேற்றியது இயக்கத்தினர் செய்த மிகப்பெரிய தவறு.



அடுத்து செய்த தவறு முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை. மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழக அரசியல்வாதிகளால் முடியாமற் போனது.



இவை எல்லாவற்றையும் விட இயக்கத்தினர் சரிவைச் சந்தித்தது கருணாவின் பிரிவிற்குப் பின்பு தான். இயக்கமே சிறிது உடைந்தது. கருணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வித்திட்டது.



கருணாவை, காட்டிக் கொடுத்த கருணா என்று கூட சொல்லலாம். சந்திரிகா காலம் வரை விடுதலைப் புலிகளை அவர்களது இடங்களைப் பற்றி சிங்கள அரசுக்கு எதுவும் தெரியாது.



கருணா பிரிவுக்குப் பின் கருணா இலங்கை அரசின் கைக்கூலியாக மாறிய பின் தான் போராளி இயக்கத்தினர் பின்னடைவைச் சந்தித்தனர். ஈழப்போர் IV ன் கடைசிக் கட்டத்தில் கூட கருணா சொல்றார், தலைவர் தப்பித்துப் போக மூன்று இடங்கள், வழிகள் உள்ளன என்று. இயக்கத்தினரின் பேரழிவிற்குக் காரணம் கருணாவின் ஸ்கெட்ச்.



கருணாவுக்கு இயக்கத்தில் உரிய இடம் கொடுக்கப்படாததால் தான் அவர் அங்கிருந்து விலகினார் என்று என்ன இடமிருக்கிறது.



ஆயத பலம், தொடர்பு சாதனங்கள், படை பலம் இருந்தும் போராளிகள் இயக்கம் தங்கள் இலக்கை அடையாத காரணங்கள்



மற்றவர்களை அரவணைத்துச் செல்ல வில்லை.



சகிப்புத்தன்மையுடன் செயல்படாதது.



மிகவும் வருந்தத்தக்க விடயம், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட, துரத்தியடிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகம்.



XV. முள் வேலிக்குள் 3 லட்சம் பேர்



ஈழப்போர் iv ன் விளைவாக உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தோர் 3 லட்சம் பேர். இவர்கள் முள் வேலியால் சுற்றி வளைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடுமையான கட்டுக் காவலில் இருக்கும் இவர்களில் பலரை இனவெறி சிங்கள அரசு இன ஒழிப்பு செய்கிறது.



இந்த 3 லட்சம் பேரை அவர்களது சொந்த இடத்திலேயே மீண்டும் குடியமர்த்துவதாகக் கூறும் சிங்கள அரசு அதை இன்னும் முழுமையாகச் செயல்படுத்த

வில்லை. எனவே இலங்கை சிங்கள அரசுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.



XVI. இனவெறி சிங்கள அரசுக்கு உதவிகள்



பசுத்தோல் போர்த்திய புலியாக உலக நாடுகளிடம் வேஷம் போடும் இனவெறி பிடித்த அரசுக்கு உதவி செய்ய உலக நாடுகள்



30 வருடங்கள் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் புணர் நிர்மாணத்துக்கு உதவி கேட்கிறது சிங்கள அரசு. அப்படி உதவியாக வரும் தொகை சிங்கள

பூமியை வளமாக்கச் செலவழிக்கப்படுமே தவிர ஈழத்துக்காகச் செலவழிக்கப் படுவது மிகவும் குறைவான தொகையாக இருக்கும். கண் துடைப்பு நாடகமாக இருக்கும்.



XVII. ஈழப் போராட்டத்தின் பலவீனம்



1. அரசியலமைப்பு

2. ஜனத்தொகை

3. காவலர்கள், இராணுவம்

4. ஈழப் போராட்டத்தில் மக்கள்

5. ஒற்றுமை இல்லை

6. கருணா & கிழக்கு மாகாணம்

7. தொப்புள் கொடி உறவுகள்

8. பொருளாதாரம்



அரசியலமைப்பு



அரசியல் ரீதியாக தலைத் தமிழகமும் ஈழத்தமிழகமும் பிரிந்திருக்கிறது. இந்தியாவிற்குள் தமிழகம் மாநிலமாக வருகிறது. ஈழத் தமிழகம் இலங்கையின்

பகுதியாக வருகிறது.



ஆக, ஒரு நாடு என்ற அளவில் தான் பார்க்கிறார்களே ஒழிய, மொழி ஒன்றாக இருந்தும் நாடுகளால் பிளவு பட்டு நிற்கும் ஒரே மொழி மக்களாகப்

பார்க்கவில்லை, பார்க்க மாட்டார்கள்.



ஜனத்தொகை



இலங்கையின் மக்கள் தொகையில் 74 சதவிகிதம் சிங்களர்கள். அதுவே அவர்களுக்கு மிருகத்தனத்தைக் கொடுக்கிறது.



தமிழர்கள் சதவிகிதம் 15 தான். குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அதுவே அவர்களுக்குப் பயத்தையும் பலவீனத்தையும் கொடுக்கிறது.



இஸ்லாமியர் ஜனத்தொகை 7 லிருந்து 8 சதவிகிதம். 1990 அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து 28,000 முஸ்லீம்கள் தமிழ்ப் போராளிகளால்

வெளியேற்றப் பட்டனர். ஆக, ஒட்டு மொத்த முஸ்லீம் மக்கள் ஆதரவும் தனி ஈழத்துக்குக் கிடையாது.



காவலர்கள், இராணுவம்



இலங்கை அரசின் காவல்துறையும், இராணுவமும் முழுக்க முழுக்க சிங்களர்களுக்கானதே. தமிழர்களுக்கு இலங்கை அரசின் காவல்துறையிலும்,

இராணுவத்திலும் வேலை கிடையாது. இது இன வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு.



தற்பொழுது கருணா பிரிவினருக்குக் காவல் துறையில் வேலை கொடுத்திருப்பதாக ஒரு செய்தி, அதுவும் அடிமட்ட வேலை, இது எந்த அளவுக்கு உண்மை ?



ஈழப்போராட்டத்தில் மக்கள்



ஈழத்துக்கான போராட்டத்தில் ஈழ மக்கள் ஈடுபடவில்லை. பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.



மக்கள் போராடும்போது தான் அந்தப் போராட்டம் வெற்றி பெறுகின்றது. ஈழப்போராட்டத்தில் இதுவரை போராடியவை அமைப்புகளும், போராளிகளும் தான்.



மக்கள் அமைதியான வாழ்க்கையைத் தான் விரும்புகிறார்கள். ஆயுதங்கள் வாங்குவதற்குச் செலவிட்ட பணத்தை, போராளிகள் மக்கள் நலனுக்காக

செலவிட்டிருந்தால், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு ஈழத் தமிழர்களுக்கான சம உரிமைகள் கிடைத்திருக்கும்.



ஈழ மக்கள் மனதில் ஈழத்துக்கான எண்ணம் இருக்கிறது, எழுச்சி இல்லை.



ஒற்றுமை இல்லை



போராளிகளிடம் சம உரிமைக்கான ஈழப் போராட்டத்துக்கு ஒற்றுமை இல்லை. 1948 முதல் இதுவரை 38 போராளி அமைப்புகள் எதாவது ஒரு வகையில் ஈழ மக்களுக்காகப் போராடி இருக்கின்றன.



இத்தனை அமைப்புகள் உண்டாகியும், அமைப்புகள் உருவான நோக்கம் நிறைவேறியதா? ஏன்? போராளி அமைப்புகள் அனைத்தும் தங்களை முன் நிறுத்தவே முயன்றன.



போராளி அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரளவே இல்லை.



கருணா & கிழக்கு மாகாணம்



விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தது ஈழத் தமிழர்களுக்கு, தனி ஈழம் என்ற போராட்டத்துக்கு பின்னடைவு என்றால் அது மிகையல்ல.



வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது இது இந்தியாவில் வட மாநிலங்கள் வளமாகவும், தென் மாநிலங்கள் வளம் குறைவாக இருப்பதைக் குறித்து அரசியலில் பேசப்படும் வார்த்தை. தமிழகத்திலும் இதே போன்ற வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது சூழ்நிலை உள்ளது.



ஈழத்திலும் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் என்ற பிரிவு இருப்பது வேதனைக்குரிய விஷயம். இது எந்த அளவுக்கு உண்மை என்பது புரியவில்லை.



போராளிகளுக்கு எதிரான போரில் இராணுவத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது கருணா என்பது முக்கியமான விடயம்.



தொப்புள்கொடி உறவுகள்



தலைத் தமிழகத்து தமிழர்களை ஈழத் தமிழர்கள் குறிப்பிடும் வார்த்தை தொப்புள்கொடி உறவுகள்.



தமிழகத்திலிருந்து ஆதரவுக்குரல் மட்டும் தான் கொடுக்க முடிகிறதே தவிர ஆதரவுக் கரம் நீட்ட முடியவில்லை.



ஈழத்திலிருந்து உதவிக்குரல் கேட்கும் போது விரைந்து செல்ல பாண்டியனோ, சேரனோ இன்று இல்லை. காரணம் ஆதிகாலத்து மண உறவுகள், அரசியல் உறவுகள் தற்போது இல்லை.



இந்த தொப்புள் கொடி உறவை நினைத்து ஏங்கும் ஈழத் தமிழர்களை தலைத் தமிழகத்தில் எப்படி நடத்துகிறார்கள் ? ஒரு உதாரணம்.



இலங்கை அகதிகளுக்கான பி.ஏ.பி.எல். சட்டப் படிப்பு முடித்த ஒரு இளைஞர் வக்கீல் தொழில் நடத்த அனுமதி இல்லை. வயிற்றுப் பாட்டுக்கு இப்பொழுது

கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்.



ஈழப் போராட்டத்துக்காக இங்கே மேடையில் முழங்கும் அரசியல் வாதிகள், திரை உலகினர் உண்மையில் ஈழத் தமிழரின் சம உரிமைக்காக என்ன

செய்கிறார்கள் ? ஈழப் பிரச்சனை குறித்து அவர்களது காரசாரமான பேச்சுகள் அவர்கள் சுயலாபத்துக்காகவா ? அல்லது உண்மையிலேயே உள்

மனத்திலிருந்தா ?



தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் ?



தொப்புள் கொடி உறவுகளான தமிழகப் பொது மக்களுக்கு ஈழப் போர் IV க்குப் பின்தான் ஈழத் தமிழர்களைப் பற்றிய கவனம் திரும்பியிருக்கிறது. அது பண்டைய கால உறவாக தோள் கொடுக்க உருவாகுமா ?



பொருளாதாரம்



ஈழத் தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரியது. பல்வேறு இன ஒழிப்பு நடவடிக்கைகளால் அவர்களது பொருளாதாரம் முடங்கி உள்ளது.



அவர்களுக்கான அடிப்படையான கட்டமைப்பு உருக்குலைந்து கிடக்கிறது. சம உரிமைக்காக, பிரதிநிதித்துவத்துக்காக போராட அவர்களது பலவீனமான

பொருளாதாரம் இடம் கொடுக்காது.



தீவிரவாத முத்திரை



ஈழத்துக்கான போராட்டத்துக்கு, சம உரிமைக்கான நடவடிக்கைக்குத் தீவிரவாத, பிரிவினை முத்திரை குத்தப்பட்டு உள்ளது.



ஈழப் போராளிகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 32. ஒரு இனத்துக்காக, மொழி சார்ந்த இனத்துக்கான சமஉரிமைப் போராட்டம் உலக

நாடுகளால் தீவிரவாதமாக, பிரிவினையாக எண்ணப்படுகிறது.



XVIII. ஈழப் போராட்டத்தின் பலம்



1. பூர்வீக பூமி

2. புலம் பெயர்ந்த தமிழர்கள்

3. அரசுக்குப் போராளிகள் மீதான பயம்

4. மீள் உருவாக்கம் (அ) மீள் எழுச்சி

5. கலையப் போகும் நல்லவன் வேஷம்



பூர்வீக பூமி



ஈழத்தமிழர்களின் ஒரே பலம் இது தான்.



சிங்களர்கள் தான் இலங்கையில், வெளியிடத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்.



ஈழத் தமிழர்கள் ஈழத்தின் பூர்வீகக் குடிகள், குடியமர்த்தப் பட்டவர்கள் அல்ல.



துட்டகமுனு (கி.மு. 49) காலத்திலிருந்து சிங்களர்கள் அவ்வப் பொழுது ஈழத்தைக் கைப்பற்றுவதும் பிறகு அங்கிருந்து தமிழர்களால் விரட்டியடிக்கப்

படுவதுமாகத் தான் இருந்திருக்கிறது.



ஆங்கிலேய அரசு செய்த வரலாற்றுப் பிழையால் சிங்களவர்களின் இனவெறி; ஈழத் தமிழர்களை சம உரிமை இல்லாமல், உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் ஈழத் தமிழர்களை அடக்கி வைத்திருக்கிறது.



சொந்த மண்ணில் அடிமையாய் வாழும் ஈழத் தமிழர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கப் போராளிகள் எடுத்த முயற்சி, பல காரணங்களால்

நிறைவுபெற வில்லை.



ஆனாலும் சரித்திரத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, ஈழத் தமிழர் வாழ்க்கை மீண்டும் வலுப்பெற்று உயிர் பெறும். அது காலத்தின் கட்டாயம்.



புலம் பெயர்ந்த தமிழர்கள்



கண்ணீரும் கம்பளையுமாக ஈழத்தை விட்டு 1983 இனக் கலவரத்தில் வெளியேறியவர்கள் இவர்களுடைய பங்களிப்பினால் தான் போராளிகளின் பொருளாதாரம் 1984-85ல் சீரடைந்தது.



ஈழத் தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் நிறைவேறுவது இவர்கள் கையில் தான் இருக்கிறது.



தாயகத்திற்காகத் தங்களை வருத்தி நிதி உதவி செய்யும் இவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.



ஈழத்தைச் சுற்றியே உலவும் இவர்களது மனம் தான் ஈழப் போராட்டத்துக்கான மூலதனம் & பலம்.



சமீபத்தில் ஈழ மக்களுக்கு இவர்கள் அனுப்பிய 800 டன் நிவாரணப் பொருட்கள் வணங்காமண் (கேப்டன் அலி) கப்பல் மூலம் சென்று பல பிரச்சினைகளைச் சந்தித்துத் தற்சமயம் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.



அரசுக்குப் போராளிகள் மீதான பயம்



அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். ஈழப்போர் IV முடிவுக்கு வந்த பிறகும், ராஜபக்சே கூட்டத்திற்கு எந்த இடத்தில் இருந்து

போராளிகள் தாக்குவார்களோ என்ற பயம் விலகவில்லை.



எனவேதான் முள் வேலிக்குள் அடைபட்டிருக்கும் 3 லட்சம் பேரில் பலர் போராளி என்ற முத்திரையில் காணாமல் போகிறார்கள். வெள்ளை வேனும் இன ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.



உள் நாட்டில் போராளிகளைத் தேடும் சிங்கள அரசு, வெளி நாடுகளிலும் போராளிகளைத் தேடுகிறது. இது போராளிகளை ஒழிக்க என்று சொல்லப்பட்டாலும், போராளிகள் மீதான பயம் சிங்கள அரசை விட்டு அகலவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.



மீள் உருவாக்கம் (அ) மீள் எழுச்சி



அடிமைத் தளையை அகற்ற அறவழியிலான ஈழத் தமிழர்களின் போராட்டம் உருவாகும். சில காலம் ஆகும்.



அடுத்த கட்ட அறவழிப் போராட்டம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறும். சிங்களர்களின் இனவெறியைத் தோலுரிக்கும். மக்களின் எழுச்சியாக மீள்

உருவாக்கம் பெறும். சம உரிமை, பிரதிநிதித்துவத்துக்கான போராட்டம் சிங்கள அரசை வீழ்த்தும்.



ஈழத் தமிழர்களின் மகிழ்ச்சி, மீள் எழுச்சியின் மூலம் மீள் உருவாக்கம் பெறும்.



கலையப் போகும் நல்லவன் வேஷம்



உலக நாடுகளில் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நல்லவன் வேஷம் போடும் சிங்கள அரசின் வேஷம் காலத்தினால் அழிக்கப்படும். அவர்களே அவர்கள் வேஷத்தை அழிப்பார்கள்.



அவர்களது இனவெறி பிடித்த ஜேவிபி அமைப்பு மீண்டும் தன் சுய உருவத்தைக் காட்டும். ஜன நாயகப் பாதையில் பயணிப்பது சிங்களவர்களுக்குப் பிடிக்காது.



அகிம்சையையும், அமைதியையும் போதிக்கும் புத்த மதத்தில் உள்ள சிங்களர்களுக்கு அமைதி, அகிம்சை பிடிக்காது. அதுவரை காத்திருந்து பார்ப்போம்.



XIX. நிறைவுரை



ஈழம் தமிழர் பூமி. சிங்களவர்கள் வந்தேறிகள். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது சிங்களர்களிடம் ஆட்சியை இங்கிலாந்து அரசு கொடுத்தது வரலாற்றுப் பிழை. சிங்களரின் இனவெறி என்றும் ஓயாது. இத்தனை இடர்பாடுகளைத் தாண்டி தமிழ் ஈழ மக்கள் சம உரிமை அனுபவிக்க, சுதந்திரமாக காலம் கனிய வேண்டும். ஈழத் தமிழர்களும், அறவழிப் போராட்டத்தில் இழந்த சம உரிமைகளைப் பெற்று மீள் எழுச்சியடைய வேண்டும். தமிழ் ஈழம் மீள் உருவாக்கம் பெற வேண்டும். அதற்கான காலம் கனியும்.